எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

ஆவியில் நிரம்பி

அமெரிக்க நாட்டு எழுத்தாளரும், புதிய ஏற்பாட்டு அறிஞருமான ஸ்காட் மெக்நைட; உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, "ஆவியில் நிரம்பிய அனுபவத்தைப் பற்றி" பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு முகாமில் இருந்தபோது, ஆவியானவருக்கு  ஒப்புவிப்பதன் மூலம் கிறிஸ்துவை வாழ்க்கையின் சிம்மாசனத்தில் அமர்த்த அதின் பேச்சாளர் அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், அவ்வறிஞர் மரத்தடியில் அமர்ந்து, "பிதாவே, என் பாவங்களை மன்னியும்.  பரிசுத்த ஆவியானவரே, என்னுள்ளே வந்து என்னை நிரப்பும்" என்று ஜெபித்தார். ஒரு பெரிய வல்லமையான மாற்றம் ஏற்பட்டது. “அந்த தருணத்திலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாய் மாறியது. பூரணம் அல்ல ஆனால் மற்றம் உண்டானது” என்றார். வேதத்தைப் படிக்கவும், ஜெபிக்கவும், இயேசுவில் உள்ள மற்ற விசுவாசிகளைச் சந்திக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவருக்கு உடனே விருப்பம்  ஏற்பட்டது.

 

உயிர்த்தெழுந்த இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன், தனது நண்பர்களிடம், ”ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்” (அப்போஸ்தலர் 1:5) என்று கட்டளையிட்டார். அவர்கள் பெலனடைந்து, ”எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், சாட்சிகளாயிருப்பீர்கள் (அப்போஸ்தலர் 1:8). இயேசுவை நம்பும் ஒவ்வொருவருக்கும் தேவன் பரிசுத்த ஆவியைத் தருகிறார். இது பெந்தெகொஸ்தே நாளில் முதலில் நடந்தது (அப்போஸ்தலர் 2ஐப் பார்க்கவும்). இன்றும் யாரெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறார்களோ அவர்களுடைய வாழ்விலும் இது நிகழ்கிறது.

 

இயேசுவை விசுவாசிக்கிறவர்களை தேவனுடைய ஆவியானவர் தொடர்ந்து தம் ஆவியால் நிரப்புகிறார். ஆவியானவரின் உதவியால் சுபாவ மாற்றங்கள் மற்றும் உன்னதமான விருப்பங்கள் போன்ற கனிகளை தருகிறோம் (கலாத்தியர் 5:22-23). தேவன் நமக்கருளும் ஆறுதலுக்கு, உணர்த்துதலுக்கு, உதவிக்கு மற்றும் அன்பிற்காக நன்றியோடு துதிப்போம்.

விசுவாசம் கேள்வியினால் வரும்

பாஸ்டர் பாப், அவரது குரலைப் பாதிக்கும் வகையிலான ஒரு பெலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது,  பதினைந்து ஆண்டுகள் அவர் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் வாழ நேரிட்டது. பேச முடியாத ஒரு போதகரால் என்ன செய்ய முடியும் என்று அவர் சோர்ந்துபோனார். இந்தக் கேள்வியுடன் அவர் போராடினார். தனது ஏக்கத்தையும் குழப்பத்தையும் தேவனிடம் விண்ணப்பித்தார். “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று அவர் ஜெபித்தார். அவர் வேதத்தைப் படிக்க நேரம் செலவழித்தபோது, தேவன் மீது அவருக்கு இருந்த அன்பு அதிகரித்தது. அவர், “வேதத்தை உள்வாங்குவதற்கும் அதில் மூழ்கியிருப்பதற்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஏனென்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும்” என்று அறிக்கையிடுகிறார். 

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. பவுல், யூதர்கள் அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினார் (ரோமர் 10:9). அவர்கள் எப்படி நம்புவார்கள்? தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் ஏற்படும் விசுவாசத்தினாலும், கிறிஸ்துவைக் குறித்த வார்த்தையினாலுமே அது சாத்தியமாகும் (வச. 17). 

பாஸ்டர் பாப், வேதத்தை வாசிக்கும்வேளையில் கிறிஸ்துவின் செய்தியை பெற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் முயற்சிக்கிறார். அவரால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பேசக்கூடும். அவ்வாறு பேசும்போதும் அதிக வேதனையை அவர் உணருவார். ஆனால் அவர் வேதத்தில் மூழ்கியிருப்பதின் மூலம் தேவனிடமிருந்து சமாதானத்தையும் திருப்தியையும் தொடர்ந்து காண்கிறார். ஆகவே, நம்முடைய போராட்டங்களில் இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவருடைய செய்தியைக் கேட்கும்போது அவர் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வார்.

சோதனைகள் மூலம் பெலப்படுத்தப்பட்டது

“நான் கண் பரிசோதனை செய்து கொண்டேன்” என்ற ஒரு ஸ்டிக்கரை என்னுடைய மகன் ஒரு கடிதத்தில் ஒட்டியிருந்தை பார்த்த மாத்திரத்தில் என் நினைவுகள் பின்நோக்கி சென்றன. அவனுடைய கண்ணில் அந்த மருத்தை ஊற்றிக்கொண்டு, அந்த ஸ்டிக்கரை அவன் பெருமையோடு ஒட்டிக்கொண்டதை பார்த்து நான் நெகிழ்ச்சியடைந்தேன். பலவீனமான கண் தசைகள் காரணமாக, அவன் நேர்த்தியாய் செயல்பட்ட தனது கண்ணின் மீது ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்களுக்கு ஒரு பேட்ச் அணிய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்வதின் மூலம் அவனுடைய பலவீனமான கண் சரியாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவனுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. அவனுடைய பெற்றோர்களாகிய எங்களை ஆறுதலாகவும், ஒரு குழுந்தையின் விசுவாசத்தோடு தேவனையும் சார்ந்துகொண்டு அவன் இந்த சவால்களை ஒவ்வொன்றாய் மேற்கொண்டான். இந்த சவால்களின் மூலம் அவன் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டான். 

பாடுகளிலும் உபத்திரவத்திலும் நிலைநிற்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களினால் அடிக்கடி மாற்றத்தை அனுபவிக்கின்றனர். பவுல் அப்போஸ்தலர் அதற்கு ஒரு படி மேலே போய், “தேவமகிமையை அடைவோமென்கிற” நம்பிக்கையினாலே, உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது என்கிறார். உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறது என்கிறார் (ரோமர் 5:3-5). பவுல், கப்பல் சேதம் மற்றும் சிறைவாசங்கள் போன்ற சோதனைகளை அனுபவித்தவர். ஆகிலும் ரோமில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அவர் சொல்லும்போது. “நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (வச. 5) என்கிறார். நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, கிறிஸ்துவின் மீதான நம்முடைய நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துவார் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். 

நீங்கள் எவ்விதமான போராட்ங்களை சகித்தாலும், தேவன் தன்னுடைய கிருபையையும் இரக்கத்தையும் உங்கள் மீது பொழியச் செய்வார். அவர் உங்களை நேசிக்கிறார்.

சிறந்த அன்பு

இயேசுவின் சிலுவை தியாகத்தை நினைவுகூரும் அந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகமான அன்பை நினைவுகூர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடும்வேளையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தி  அங்கிருந்த இருவரைக் கொன்றான். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அவன் தன் கைவசம் பிடித்துவைத்திருந்த மக்களை விடுவித்தான்;. ஆனால் அவனுடைய பாதுகாப்புக்காக அதில் ஒரு பெண்ணை மட்டும் பினையக்கைதியாய் பிடித்து வைத்திருந்தான். ஆபத்தை அறிந்த போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம், எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் அவன் பிடித்து வைத்திருந்த பெண்ணுக்கு பதிலாக, தன்னை பிடித்து வைத்துக்கொள்ளும்படிக்கு முன்வந்தார். தீவிரவாதியும் அதை ஒப்புக்கொண்டு அவளை விடுவித்தான். ஆனால் அதற்கடுத்து நடந்த சண்டையில், பெல்ட்ரேம் காயமடைந்து பின்னர் இறந்துபோனார்.

அந்த போலீஸ் அதிகாரியை நன்கு அறிந்த போதகர் ஒருவர், அவருடைய அந்த துணிச்சலான செய்கையை தேவன் மீதான விசுவாசத்திற்கு ஒப்பிட்டு யோவான் 15:13ஐ மேற்கோள் காண்பிக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” பூமியில் தன்னுடைய கடைசிபோஜனத்தை புசித்த இயேசு இவ்வார்த்தைகளை தன்னுடைய சீஷர்களைப் பார்த்து கூறினார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” (வச. 12) என்று போதித்த அவர், ஒருவர் தன் சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்க துணிவதே அந்த மெய்யான அன்பு என்று கூறுகிறார் (வச. 13). அதைத்தான் அடுத்த நாளில் அவர் செய்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும்பொருட்டு, அவர் சிலுவையில் தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்தார்.

அர்னாட் பெல்ட்ரேம் செய்த அந்த துணிச்சலான தியாகத்தை செய்வதற்கு நமக்கு அழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய மாம்ச திட்டங்களை விட்டுவிட்டு, அவருடைய அந்த சிறந்த அன்பின் மேன்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க பிரயாசப்படுவோம். 

புத்துணர்ச்சியூட்டும் பாலைவனச்சோலை

ஆன்ட்ரூவும் அவனது குடும்பத்தினரும் கென்யாவில் வனப்பயணம் சென்றிருந்தபோது, ஒரு ஏரியை நோக்கிப் பல வகையான மிருகங்கள் செல்வதைக் கண்டு மகிழ்ந்தனர். அவ்வாழ்வு தரும் நீரூற்றை நோக்கி, ஒட்டகச்சிவிங்கிகளும், காட்டு மிருகங்களும், நீர்யானைகளும், நீர்ப்பறவைகளும் பயணம் செய்தன. அக்காட்சியை ஆன்ட்ரூ உற்றுக் கவனித்தபோது, வேதமானது அத்தண்ணீரைப் போல வழிநடத்துதலையும், ஞானத்தையும் தருவதுமின்றி, மனிதர்களுடைய நடைமுறை வாழ்க்கையில், புத்துணர்ச்சியைத் தந்து அவர்கள் தாகத்தைத் தீர்க்கும் தெய்வீகம் சுரக்கும் ஊற்றாய் இருக்கிறதென்பதை நினைவுகூர்ந்தார்.

ஆன்ட்ரூவின் அக்கணிப்பு பழைய ஏற்பாட்டில் தேவனின் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் குறிக்கும் பதமான "தேவனின் வேதத்தில்" பிரியமாயிருந்து, அதை தியானிப்பவர்களை "பாக்கியவான்" என்று சங்கீதக்காரன் அழைப்பதை எதிரொலிக்கிறது. வசனங்களைத் தியானிக்கிறவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தரும் மரத்தைப் போலிருக்கிறார்கள் (சங்கீதம் 1:3). எப்படி வேறானது மண்ணுக்குள் சேர்ந்து, வளர்ச்சியைப் பெற்றுக் கொள்கிறதோ, அதேபோல், தேவனை உண்மையாய் நேசித்து அவரை விசுவாசிப்பவர்களும், சத்தியத்தில் வேரூன்றி, அவர்களுக்குத் தேவையான பலத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.

தேவனுடைய ஞானத்திற்குள்ளாக, நம்முடைய ஆதாரங்களை நாம் ஒப்புக்கொடுக்கும் போது, நாம் "காற்றுப் பறக்கடிக்கும் பதரை போல்" (வ.4 ) இருக்க மாட்டோம். தேவன் நமக்கு வேதத்தில் கொடுத்துள்ளவற்றை நாம் தியானிக்கும் போது, நாம் அவருடைய பராமரிப்பையும் வழி நடத்துதலையும் பெற்று நிலைத்திருக்கும் கனி கொடுக்கிறவர்களாய் இருக்க முடியும்.       

ஜீவத்தண்ணீர்

கீதாவின் குடும்ப வாழ்க்கை நிலையற்றது, பதினான்கு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, வேலை தேடி நண்பர்களுடன் வாழ்ந்தாள். அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஏங்கியவள், பின்னர் அவளுக்குப்  போதைப்பொருளை அறிமுகப்படுத்தியவனுடன் சென்றாள். அவளுடைய வழக்கமான குடிப்பழக்கத்துடன் இதுவும் சேர்ந்தது. ஆனால் உறவும் போதைப் பொருட்களும் அவளது ஏக்கங்களை பூர்த்தி செய்யவில்லை. அவள் தேடிக்கொண்டே இருந்தாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளுடன் ஜெபிக்க முன்வந்த இயேசுவின் விசுவாசிகளை அவள் சந்தித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, அன்பின் தாகத்தைத் தணிக்கும் இயேசுவை அவள் இறுதியாகக் கண்டாள்.

கிணற்றடியில் இயேசு தண்ணீருக்காக அணுகிய சமாரியப் பெண்ணின்  தாகமும் தணிந்தது. பகல் வெப்பத்தில் அவள் அங்கே இருந்தாள் (யோவான் 4:5-7) அவளுடைய பல கணவர்களின் கதை மற்றும் தற்போதைய தவறான உறவு (வவ. 17-18) குறித்து மற்ற பெண்களின் பார்வை மற்றும் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். இயேசு அவளை அணுகி அவளிடம் தண்ணீர் கேட்டபோது, ​​அவர் அன்றைய சமூக மரபுகளை உடைத்தார். காரணம் அவர் ஒரு யூத போதகர், பொதுவாக ஒரு சமாரியப்  பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் அவளை நித்திய ஜீவனுக்கு இட்டுச் செல்லும் ஜீவத்தண்ணீரை பரிசாகக் கொடுக்க விரும்பினார் (வ. 10). அவள் தாகத்தைத் தீர்க்க விரும்பினார்.

இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்கையில், ​​நாமும் இந்த ஜீவத் தண்ணீரைக் குடிக்கிறோம். அவரைப் பின்தொடரும்படி மற்றவர்களை அழைத்து ஜீவத்தண்ணீரை பகிர்ந்து கொள்ளலாம்.

நல்ல மேய்ப்பன்

பாஸ்டர் வாரன், தமது தேவாலயத்தில் ஒரு நபர் தம் மனைவி மற்றும் குடும்பத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டபோது, ​​​​அவரோடு பேசும்படி தற்செயலாக அந்த மனிதரைச் சந்திக்க உதவுமாறு தேவனிடம் கேட்டார். தேவன் செய்தார்! வாரன் ஒர் உணவகத்திற்குள் நுழைந்தபோது, ​​​​அருகிலுள்ள சாவடியில் அந்த மனிதரைக் கண்டார். "பசியோடிருக்கும் எனக்கும் இடம் உண்டா?" என்று அவரிடம் கேட்டார், சீக்கீரமாக அவர்கள் ஆழமாகப் பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஜெபித்தனர்.

எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் தமது மந்தையை மேய்ப்பேன் என்று கூறியது போல; ஒரு போதகராக, வாரன் தமது தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மேய்ப்பனாகச் செயல்பட்டார். தேவன் தம்முடைய சிதறிய ஆடுகளைத் தேடி, அவற்றை மீட்டு, ஒன்று சேர்ப்பதாக வாக்களித்தார் (எசேக்கியேல் 34:12-13). "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்" என்றும், "காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டு (வருவேன்)" என்றும், "எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்" என்றும் சொன்னார் (வ. 14–16). தம் ஜனங்களின் மீதான தேவனின் அன்பு இந்த ஒவ்வொரு உருவகத்திலும் எதிரொலிக்கிறது. எசேக்கியேலின் வார்த்தைகள் தேவனின் எதிர்கால செயல்களை எதிர்நோக்கியிருந்தாலும், அவை தேவனின் நித்திய இதயத்தையும் மேய்ப்பனாக வெளிப்படப்போகும் இயேசுவையும் பிரதிபலிக்கின்றன. 

நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகி, நம்மை மீட்டு, நல்ல மேய்ச்சலில் அடைக்கலம் தருகிறார். ஆடுகளுக்காகத் தம்முடைய உயிரைக் கொடுக்கிற நல்ல மேய்ப்பரை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் ஏங்குகிறார் (பார்க்க யோவான் 10:14-15).

சிங்கக்கெபியிலிருந்து

தாஹெரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை ஏற்றுக்கொண்டதினிமித்தம் தங்கள் சொந்த தேசத்தில் பாடுகளை அனுபவிக்கவேண்டியதை அறிந்தே செயல்பட்டனர். அதின் விளைவாய் தாஹெர் கண்களும் கைகளும் கட்டப்பட்டவராய் சிறையிலடைக்கப்பட்ட விசுவாச துரோகம் இழைத்தவர்களாய் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் சித்திரவதை அனுபவிக்கப்போகும் முன்பு, அவரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை மறுதலிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தனர். 

அவரை கொலைசெய்ய கொண்டுபோகும் இடத்தில் நடந்த சம்பவம் அவரை ஆச்சரியப்படுத்தியது. நீதிபதி அவரைப்பார்த்து, “எனக்கு ஏன் என்று தெரியவில்லை, ஆனால் மீனின் வாயிலிருந்தும் சிங்கத்தின் வாயிலிருந்தும் உன்னை விடுவிக்க விரும்புகிறேன்” என்று சொன்னார். நீதிபதி உதாரணமாய் பயன்படுத்திய வேதத்தின் இந்த இரண்டு சம்பவங்களை வைத்து (யோனா 2, தானியேல் 6) தேவன் தன்னை விடுவிக்க விரும்புகிறார் என்பதை தாஹெர் புரிந்துகொண்டார். தாஹெர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவனுடைய குடும்பம் வேறு தேசத்திற்கு நாடுகடத்தப்பட்டனர். 

தாஹெரின் இந்த ஆச்சரியமான மீட்பு தானியேலின் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. திறமையான நிர்வாகியாய் அவன் படிப்படியாய் முன்னேறுவதை அவனோடிருந்த மற்ற தலைவர்கள் விரும்பவில்லை (தானியேல் 6:3-5). ராஜாவைத் தவிர்த்து யாரையும் வணங்கக்கூடாது என்னும் சட்டத்தை பிறப்பிக்கச் செய்து, அவனை குற்றப்படுத்த எண்ணினர். தானியேல் இதை சற்றும் பொருட்படுத்தவில்லை. தரியு ராஜாவுக்கு அவனை சிங்கக்கெபியில் போடும்படிக்கு உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை (வச. 16). தாஹெரை ஆச்சரியவிதமாய் விடுவித்ததுபோல, தானியேலை தேவன் மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார் (வச. 27). 

இயேசுவை பின்பற்றுவதினால் இன்று அநேக தேவ பிள்ளைகள் உபத்திரவத்தை சந்திக்கின்றனர். சிலர் கொலையும் செய்யப்படுகின்றனர். நாம் உபத்திரவத்தை சந்திக்கும்போது, நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட வழியை கர்த்தர் வைத்திருக்கிறார் என்று நம்முடைய விசுவாசத்தை பெலப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எந்த யுத்தத்தை சந்தித்தாலும் அவர் உங்களோடிருக்கிறார் என்பதை அறியுங்கள்.

உயிருள்ளவரை நண்பர்கள்

வில்லியம் கூப்பர் (1731–1800) எனும் ஆங்கில கவிஞரும், அவரது போதகரும் முன்னாள் அடிமை வியாபாரியுமான ஜான் நியூட்டனும் (1725–1807) நண்பர்களானார்கள். மன அழுத்தத்தாலும், கவலையாலும் பாதிக்கப்பட்ட கூப்பர், இருமுறை தற்கொலைக்கு முயன்றார். நியூட்டன் அவரை சந்திக்கும்போதெல்லாம், இருவரும் தேவனைப் பற்றிப் பேசிக்கொண்டே நீண்டதூரம் ஒன்றாய் நடப்பார்கள். கூப்பரின் கவிதை  எழுதும் திறனைத் தட்டியெழுப்பும் வகையில், தனக்காகப் பாடல்களை எழுதும்படி ஊழியக்காரர் கேட்டுக்கொண்டார். கூப்பர் சம்மதித்து, "தேவன் அறிவுக்கெட்டாத வகையில் செயல்படுகிறார்" என்ற பிரபலமான பாடல் உட்பட அநேக பாடல்களை இயற்றினார். நியூட்டன் வேறு சபைக்கு மாறுதலாகிச் சென்றபோதிலும், அவரும் கூப்பரும் உற்ற நண்பர்களாய் கூப்பரின் மரணம் வரைக்கும் கடிதங்களில் உறவாடினார்கள்.

கூப்பர் மற்றும் நியூட்டன் ஆகிய இருவரின் நட்பை நான் பழைய ஏற்பாட்டின் தாவீது மற்றும் யோனத்தானுக்கு இடையேயான நட்போடு தொடர்புப்படுத்திப் பார்க்கிறேன். தாவீது கோலியாத்தை வென்றபின், "யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்." (1 சாமுவேல் 18:1). யோனத்தான் சவுல் ராஜாவின் குமாரனாய் இருந்தாலும், ராஜாவின் கோபத்திற்கும் பொறாமைக்கும் தாவீதை தற்காக்கிறான், தாவீது ஏன் கொல்லப்பட  வேண்டுமென்று தன் தந்தையிடமே கேள்வி எழுப்புகிறான். அதற்கு மாறுத்தரமாகச்  சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான் (20:33). ஆயுதத்திற்குத் தப்பிய யோனத்தானுக்கு தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது மனநோவாயிருந்தது. (வ.34). 

இந்த இரண்டு ஜோடி நண்பர்களும், உயிருள்ளவரை இணைந்திருந்து, தேவனை நேசிக்கவும் ஊழியம் செய்யவும் ஒருவரை ஒருவர் உந்தித்தள்ளினர். இதுபோல நீங்களும் இன்று உங்கள் நண்பரை எவ்வாறு ஊக்குவிப்பீர்கள்?